Thursday, May 16, 2013

பதிப்பாளர்களின் பார்வையில் சென்னை புத்தகச் சங்கமம் !



 பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் ஏப்ரல் 18 தொடங்கி 27 முடிய புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. சென்னை புத்தகச் சங்கமம் எனும் அந்நிகழ்ச்சி  திராவிடர் கழகத்தின் மிகச் சிறந்த வரலாற்றுப் பதிவுகளில் ஒன்றாக அமைந்துவிட்டது. அறுபதுக்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் பங்கு பெற்றுச் சிறப்பாக்கினர்.  தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி சிந்தனைச் சுகம் கண்டனர். இந்தச் சென்னை புத்தகச் சங்கமத்தின் முதல் ஏற்பாட்டை பதிப்பாளர்கள் எப்படி பார்க்கிறார்கள்?  புத்தக உலகில்  பேராற்றல் கொண்டவர்களின் எண்ணங்களாக  இந்தப் பதிவு அமைகிறது. பங்கேற்ற அனைவர் சார்பாக நால்வர் பேசியதின் தொகுப்பு.
சிக்ஸ்சென்ஸ் பதிப்பாளர் புகழேந்தி !
எனது தந்தை வே.சுப்பையா அவர்கள் 1968 - இல் பூங்கொடி பதிப்பகத்தைச் சென்னையில் தொடங்கினார்கள். அப்போது என் வயது 13. படித்துக் கொண்டே பதிப்புத் துறையிலும் வேலை செய்தேன். அன்றிலிருந்து 40 ஆண்டுகளைக்  கடந்துவிட்டேன். சிக்ஸ்சென்ஸ் பதிப்பை 2000 - த்தில்
தொடங்கினேன். எங்களின் முதல் வெளியீடு "இனியெல்லாம் இன்டர்நெட்".  அதைத் தொடர்ந்து 200 - க்கும் மேலான நூல்கள் வரப் பெற்றன.   வெளியீடுகளின் எண்ணிக்கையில் எனக்கு உடன்பாடில்லை. புத்தகங்கள் கனமான விசயங்களைக் கொண்டிருக்க வேண்டும். தரம் பேணுவதில் எப்போதும் நான் உறுதியாய் இருந்திருக்கிறேன். அவ்வகையில் தமிழ்நாடு அரசின் சிறந்த நூல் வெளியீட்டுக்கான முதல் பரிசை, பத்து முறைக்கு மேல் பெற்றுள்ளேன்.
தமிழ்நாட்டின் அனைத்துப் புத்தகக் கண்காட்சியிலும் நாங்கள் இடம் பெறுவோம். எங்களின் மொத்த விற்பனையில் 25 விழுக்காடு கண்காட்சி மூலம் கிடைக்கிறது. பெரியார் திடலில் புத்தகக் கண்காட்சி என்றதும் முதலில் சந்தேகம் வந்தது. காரணம் கட்சி சார்த்து காணப்படுமோ என்கிற தயக்கம். ஆனால் நான் நினைத்ததில் ஒரு விழுக்காடும்  உண்மையில்லை.  பொறுப்பேற்ற நோக்கத்தை மிகச் சிறப்பாக முடிகிறார்கள் பெரியார் தோழர்கள்.   வேறுபாடுகள் இல்லாமல் பழகுகிறார்கள். திணிப்பு என்பதை எங்கும் காண முடியவில்லை. கண்காட்சியில் நவீன தொழில்நுட்ப அறிவு என்னை அசர வைத்தது. நாம் ஏதாவது கோரிக்கைகள் வைத்தால் பணிவுடன் ஏற்கப்பட்டு, செயலாக்கப்பட்டு, முடிவும் அறிவிக்கப்படுகிறது. அதற்காக அவர்கள் எடுத்துக் கொள்ளும் நேரம் மிகக் குறைவு.
உலகப் புத்தக நாளை முன்னிட்டு இதைச் செய்தது புத்தகங்களுக்கான மரியாதை.  கண்காட்சிகளில் பதிப்பாளர்கள் மட்டுமே பங்கேற்றது  இதுவே முதன்முறை ஆகும்.  கண்காட்சி விளம்பரங்களில் வித்தியாசமான  கவனம் தெரிந்தது. பதிப்பாளர்களின்  மேம்பாடு குறித்தப் பயிற்சிப் பட்டறைப்  பலரையும் சிலிர்க்க வைத்தது. சமூக நோக்கம் என்பதில் இவையெல்லாம் அடங்கும். கண்காட்சிகளை ஒரு சில சிறு குறைகள் இருந்தாலும், முதல் ஏற்பாடே மனதில் பதிந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
நேஷனல் புக் டிரஸ்ட் மதன்ராஜ் !
புத்தகத் துறைக்கு வந்து 12 ஆண்டுகள் ஆகிறது. இந்தியா முழுவதும் கண்காட்சிகளை ஊக்குவிப்பதுதான் நேஷனல் புக் டிரஸ்ட் நோக்கம். ஆண்டுக்கு 15 முதல் 20 கண்காட்சிகள் நடத்துவோம். தமிழ்நாட்டில் இதுவரை கண்காட்சி நடைத்தியதில்லை. முதன்முறையாக பெரியார் புத்தக நிலையத்தோடு இணைந்திருக்கிறோம். தொடக்கமே நல்ல அடையாளம் கிடைத்திருக்கிறது. எங்கள் நிறுவனம் இந்திய அரசின் மனித வள மேம்பாட்டின் கீழ் வருகிறது. இந்தக் கண்காட்சியில் எண்ணற்ற நூல்களையும், வித்தியாசமான பார்வையாளர்களையும் காண முடிந்தது. சில கண்காட்சிகள் திருவிழா மாதிரி இருக்கும். விற்பனை இருக்காது. இங்கே அந்த மாதிரி எதுவும் இல்லை. எனினும் வந்தவர்கள் எல்லோரும் வாங்கினார்கள் என்பது புது அனுபவம். எங்களுக்குத் தினமும் 15 ஆயிரம் விற்றதில் மகிழ்ச்சி !  காரணம் சிறு இடம், புது இடம். அதுவும் இவ்வளவு குறைந்த வாடகையில் அரங்கு கிடைப்பது எளிதல்ல.
சின்ன விசயங்களும் நேர்த்தியாக இருந்தன. நுழைவாயிலில் இரு இளம்பெண்கள் எல்லோரையும் வரவேற்றதை நெகிழ்வாகக் கருதுகிறோம். சக மனிதர்களைப் பெருமைபடுத்துகிற செயல்கள் அவைகள். புத்தக விற்பனை என்பதையும் கடந்து குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள், பயிற்சிப் பட்டறை, கண் பரிசோதனை போன்றவை சமூகச் சிந்தனையை வெளிப்படுத்தின. பதிப்புத் துறையில் பல ஆண்டுகள் இருப்போரே பயிற்சிப் பட்டறை கண்டு அசந்துதான் போனார்கள்.  அதேபோல மாலை நேரக் கூட்டங்களில் "புகழ்பெற்ற" மனிதர்களை அழைக்காமல், புத்தகம் அறிந்த மனிதர்களைப் பேச வைத்து நிகழ்ச்சிக்குப் பொருள் கூட்டினார்கள்.  பொதுவாக மாலை நேர நிகழ்சிகளில் ஒரு மினுமினுப்புக் காட்டுவார்கள். அம்மினுப்பில் நோக்கம் சிதைந்துவிடும். இங்கு அதுபோன்ற சிதைவுகள் இல்லை. இன்னும் அழகாகச் சொல்வதென்றால், ஏற்பாடுகள் முழுவதிலுமே ஒரு இயல்பு தெரிந்தது. இயல்பான செயல்களும், அதே மாதிரியான மனிதர்களுமே இவ்வெற்றிக்கான ஆதாரம்.
கண்காட்சியில் இலாபம் இல்லாவிட்டாலும், நட்டம் ஏற்படக் கூடாது. அப்போதுதான் தொடர்ந்து செய்ய முடியும். நுழைவாயிலில் வளைவு ஒன்று வைத்திருக்கலாம். புத்தக வங்கித் திட்டத்தில் புத்தகம் கொடுப்பவர்களுக்கு மாற்றாக வேறு புத்தகம் கொடுக்கலாம். அதன் மூலம் ஈடுபாடுகள் அதிகமாகலாம். மொத்தத்தில் புத்தகக் கண்காட்சிகளின் முன்னோடியாக நிகழ்ச்சிகள் அமைந்திருந்தன. எல்லா விசயமும் இருப்பது மாதிரி பார்த்துக் கொண்டார்கள்.மகிழவும், நெகிழவும் நிறைய இருந்தன.  

எமரால்ட் பதிப்பகம் ஒளிவண்ணன் !
எனது 12 வயதில் "மெய்" திருத்தத் தொடங்கினேன். 1982 - இல் பதிப்பகம் தோற்றுவித்தேன். புத்தகங்களோடு 28 ஆண்டுகள் முடிந்திருக்கிறது.
தமிழ்நாட்டின் பல இடங்களிலும், இந்தியாவின் சில இடங்களிலும் கண்காட்சியில் பங்கேற்றுள்ளோம். உலகப் புகழ் பெற்ற ஜெர்மன் பிராங்பர்ட்  கண்காட்சியில் பார்வையாளனாக போய் வந்தேன். உலகின் அனைத்து நூல்களையும் அங்கு பார்க்கலாம். புத்தகங்களோடு  எழுத்தாளர்களும் இருப்பார்கள்.  வாசகர்கள் அவர்களைச் சந்தித்து ஆரோக்கியமாய் பேசிக் கொள்வார்கள். சென்னை புத்தகச் சங்கமம் மூலம் கல்வியாளர்கள் - பதிப்பாளர்கள் சந்திப்பு நிகழ்ந்தது. இருவருக்குமான தேவைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். நல்ல தொடக்கமாக அது அமைந்தது. கண்காட்சியில் விற்பனை மட்டுமே வெற்றி அல்ல. அதைக் கடந்து நிறைய இருக்கிறது.
 புத்தக வாசிப்பை உருவாக்குவதும், அதனைத் தூண்டிவிடுவதும் அவசியத் தேவையாகும். ஏப்ரல் 21 இல் கடற்கரையில் நடைபெற்ற புத்தக நடைபயணம் அதற்கான அடையாளம். சென்னை புத்தகச் சங்கமம் எதிர்பார்த்ததைவிட அதிகம் சாதித்துள்ளது. ஒரு விற்பனைக் கண்காட்சியை எல்லோரும் செய்துவிடலாம். ஆனால் இவர்கள் போன்று செய்வது அவ்வளவு எளிதல்ல. ஒவ்வொரு வரிசைக்கும் ஒரு தன்னார்வலர். ஒவ்வொரு அரங்கிலும் அவர்களின் கைப்பேசி எண். அதுவும் மழை பெய்த ஓர் நாளில் அவர்கள் ஆற்றிய பணிகள் கண்டு பதிப்பகத்தார்கள் மெய்சிலிர்த்துப்  போனார்கள். வாழ்வில் மறந்து போய்விடாத நிகழ்வுகள் அவை.
"ஒன்றாய் சேர்வது நல்ல தொடக்கம். பிறகு ஒன்றிணைவது வளர்ச்சி. பின்னர் சேர்ந்து உழைப்பது வெற்றி," என்பார் ஹென்றி போர்டு. சென்னை புத்தகச் சங்கமம் ஒரே தளத்தில் எல்லோரையும் கொண்டு சேர்த்துள்ளது. தொடர்ந்து சேர்ந்திருந்தால் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரலாம்.

விழிகள் பதிப்பகம் வேணுகோபால் !
விழிகள் பதிப்பகத்தை 2000 ஆம் ஆண்டில் தொடங்கினேன். ஆனால் பதிப்புத் துறை அனுபவம் 43 ஆண்டுகள். தமிழ்நாடு முழுக்கவும் சுற்றி வந்தாயிற்று.
பதிப்பாளர்கள் கண்காட்சி இதுவே முதன்முறையாகும். இதுபோன்ற திட்டங்கள் ஆங்காங்கே இருந்தன. ஆனால் இங்கு தான் அது சாத்தியாமானது. கண்காட்சி முழு வெற்றி! பதிப்பாளர்களும் மகிழ்ச்சியோடு இருந்தார்கள். காரணம் பதிப்பாளர்களின் நேரடி விற்பனை இது. ஒரே இடத்தில் பதிப்பக விலைப் பட்டியல் கிடைக்கும். மிகச் சமீபத்திய வெளியீடுகளும் பார்வைக்கு வைக்கப்படும். நிறுவனங்கள்,கல்லூரிகளுக்கு நேரடி விற்பனை செய்ய இயலும்.
அரங்கு ஒதுக்கீடு தொடங்கி சிறந்த ஏற்பாடுகள். போக்குவரத்துக்கு ஏற்ற இடம். கண்காட்சியின் எல்லா நாட்களிலும் குழந்தைகளுக்கான  நிகழ்ச்சியை இங்குதான் கண்டேன். மாலை நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக இருந்ததால் விற்பனையும் சிறப்பு. தலைப்பைத் தேர்ந்தெடுத்து நூல்கள் வாங்கினார்கள். எதிர் காலங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வர ஏற்பாடு செய்தால் மேலும் சிறப்பாகும்.
 
பதிப்பாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை வெகு சிறப்பு. இது தொடர்பான ஆங்கில நூல் ஒன்றும் நான் வாசித்துள்ளேன். எனினும் இந்த பட்டறை அருமை. சிறு சிறு மாற்றங்கள் வரும் காலத்தில் செய்ய வேண்டும் என்றாலும், இக்கண்காட்சி மிகப் பெரிய சாதனை புரிந்துவிட்டது  என்றே சொல்ல வேண்டும்.

                                                                                                                                                                                                                                         வி.சி.வில்வம்

                                              

No comments:

Post a Comment