Friday, March 21, 2014

ஆசிரியர்களும் மாணவர்களும் இங்கே இதழாளர்கள்!




சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் இருக்கிறது  தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளி. மிகச் சிறந்த பள்ளி எனத் தமிழக அளவில் பெயர் பெற்றது. ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளை 1986, 87ஆம் ஆண்டுகளில் அங்குதான் முடித்திருந்தேன். இன்றைக்கும் அப்பள்ளியின் தனித்தன்மையில் எள்ளளவும் மாற்றமில்லை; எனினும் எவ்வளவோ கூடுதல் மாற்றங்கள்! நாம் பேசுவது கல்வி மற்றும் மதிப்பெண்கள் குறித்து மட்டுமல்ல; படைப்பாளிகளாக மாறிப்போன ஆசிரியர்கள் மற்றும்  மாணவர்களின் ஆற்றல்கள் குறித்து! ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து சுழல் எனும் மாத இதழ் நடத்துகிறார்கள். 

சமூகச் சிந்தனையுடன் அவ்விதழ் தமிழ்நாடு முழுக்க வலம் வருகிறது. இதில் பெரு மகிழ்ச்சி ஒன்றும் இருக்கிறது. ஆசிரியர்களின் வழித்தடத்தில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களும் இதழ் நடத்துகிறார்கள்.

ஒரு பள்ளியில் ஆசிரியர்களும், மாணவர்களும் தனித்தனியாக  இதழ்கள்  நடத்துகிறார்களா? நம்ப முடியவில்லையே! என நீங்கள் எண்ணினால், நம்பித்தான் ஆக வேண்டும். காரணம், அந்த நம்பிக்கையை அப்பள்ளியின் தலைமையாசிரியர் அள்ளிக் கொடுக்கிறார். இன்னும் சொன்னால், தந்தை பெரியாரின் சிந்தனையை ஒட்டிய பாதையில் அவர்களின் பயணம் இருக்கிறது.

சுழல் மாத இதழ் 

வேலை நாளின் ஒரு பொழுதில் நாம் பள்ளிக்குச் செல்கிறோம். எல்லோரிடமும் பேச வேண்டும் என நாம் கோரியபோது, தலைமையாசிரியர் முகமலர்ந்து அனுமதிக்கிறார். சுழல் மாத இதழின் பொறுப்பாளர்களைச் சந்திக்கிறோம். நாங்கள் இதழ் தொடங்கி 20 மாதங்கள் முடிந்துவிட்டன. பள்ளி முடிந்து ஆசிரியர்கள் பேசிக் கொண்டிருப்போம். அப்போது சுழலத் தொடங்கியது எங்கள் சுழல்.

தமிழ்நாடு முழுக்க 1000 பிரதிகள் அனுப்புகிறோம். மாணவர்களுக்குப் படிப்பு மட்டும் முக்கியமல்ல என்பது எங்கள் கருத்து. சுழல்  இதழில் மாணவர் அரங்கம் வைத்திருக்கிறோம். அதில் அவர்கள் எழுதுகிறார்கள். நாங்களும் அவர்களுக்கு நிறைய  இதழ்கள் மற்றும் படைப்புகளை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறோம். எந்த ஒன்றையும் நாங்கள் திணிக்க விரும்பவில்லை. தாமே  இச்சமூகத்தை உணர்ந்து, தாமே ஒரு கருத்தை உருவாக்கி, தங்களைத் தாங்களே தயார் செய்து கொள்ளும் ஒரு சூழலை உருவாக்க விரும்புகிறோம்.

கண்டுபிடிக்கும் கலை 

வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம் எனும் அமைப்பு இப்பள்ளியில் செயல்படுகிறது. அதில் மாணவர்களுடன் நாங்கள்  ஒன்று சேர்வோம். அங்கு அவர்கள் கவிதை வாசிப்பார்கள் , ஓவியம் வரைவார்கள், தாங்கள் வாசித்த படைப்புகள் குறித்து விமர்சனம் செய்வார்கள். ஆண்டுதோறும் ஜூலை மாதம் ஒரு வாரம் விழா எடுப்போம். அங்கு எங்கள் மாணவர்களின் தனித்திறன்களைக் கண்டுபிடிப்போம். அது அவர்களின்  திறன்களை மேலும் வளர்த்தெடுக்க எங்களுக்கு உதவும். இவ்வாறான செயல்பாட்டில், எங்கள் மாணவர்கள் வாசித்த கவிதைகளை மொட்டுகளின் வாசம் எனத் தலைப்பிட்டு ஒரு நூலாகக் கொண்டு வந்தோம். தமிழ்நாட்டில் வெளியாகும் பிற இதழ்கள், புதிய நூல்கள், நாவல்கள் எனக் கேட்டு, கேட்டு வாசிக்கும் நிலையில் அவர்கள் இருக்கிறார்கள்.

உயர் எண்ணம்  உருவாக்கல்

மொழி வள ஆய்வு மையம் என ஒரு கூடம் எங்கள் பள்ளியில் உள்ளது. அங்கு நல்ல பேச்சுகளை ஒளிபரப்புவோம். அதையும் அவர்கள் தொடர்ந்து  கேட்டு, வளர்கிறார்கள். அதேபோல சுபம் எனும் அமைப்பு உள்ளது.

மாணவர்களுக்காக மாணவர்கள் என்பது அதன் தத்துவம். தினமும் உண்டியல் ஏந்தி வகுப்புகள் தோறும் செல்வார்கள். தங்களால் முடிந்த காசுகளை மாணவர்கள் அளிப்பார்கள். அப்பணம் வாய்ப்பில்லாத மாணவர்களுக்குச் செலவழிக்கப்படும். சக மனிதருக்குப் பயன்படும் வகையில் வாழ வேண்டும் என்பதைச் சுபம் அமைப்பின் மூலம் உணர்த்தியுள்ளோம். மேற்சொன்ன அத்தனை நிகழ்வுகளுக்கும் பின்னால் எங்களின் தலைமையாசிரியர் யாகு அவர்கள் இருக்கிறார்கள். 

சிறந்த மாணவர்களை உருவாக்குவது மட்டும் அவர்களின் பணியல்ல, அதைவிடச் சிறந்த ஆசிரியர்களை உருவாக்குவதும் அவர்களின் பணியாக இருக்கிறது. அதனால்தான் நாங்கள் இப்படி இருக்கிறோம், என ஆசிரியர்கள் கூறி முடித்தார்கள். 

சக ஆசிரியர்களின் பாராட்டுக்குரிய தலைமையாசிரியர் என்ன சொல்கிறார்? பெரியார் தந்த பாடமல்ல; பாடமே பெரியார்! சந்தியாகு எனும்  பெயரை யாகு என மாற்றிக் கொண்டேன். பர்மாவில் இருந்து 1960 இல் தமிழகம் வந்தது எங்கள் குடும்பம். 

புனேயில் உள்ள இறையியல் தத்துவக் கல்லூரியில் (சேசு சபை) பயிற்சி மேற்கொண்டேன். ஏதாவது ஒரு தத்துவத்தை விரும்பிப் படிக்கலாம் என்ற போது, நான் பெரியாரைப் படித்தேன். நான் வாசித்து முடித்த நிறைய பெரியார் புத்தகங்கள், இன்னும் புனே இறையியல் கல்லூரியில் உள்ளது. துறவறம் என்பது அனைத்தும் சேர்ந்தது என்றே நான் நினைக்கிறேன். பழையது பேசுவது மட்டுமே  என் நோக்கமல்ல. கலை, இலக்கியம் போன்றவற்றில் ஆர்வமாக இருப்பேன்.  இசை குறித்துப் பேசுவேன், சினிமா விமர்சனம் செய்வேன், நேற்றைய அரசியல் வரை தெரிந்து வைத்திருப்பேன். விளையாட்டு எனக்குப் பிடித்த ஒன்று. ஜெபம் செய்ய நேரமானாலும், மாலை நேரங்களில் விளையாடாமல் இருந்ததில்லை. எல்லா விளையாட்டிலும் நான் இருப்பேன். சுறுசுறுப்பாய் இருப்பதில் எனக்கு எப்போதுமே பிரியம். அதனாலே எனக்கு நோய்கள் வருவதில்லை. மாத்திரை, மருந்துகளும் தேவைப்படுவதில்லை. எனக்குப் பிடிக்காத ஒரே விளையாட்டு கிரிக்கெட். அதை அறவே வெறுக்கிறேன்.

கிளிப்பிள்ளை மாணவர்கள் 

என் மாணவர்களிடம் நான் சமூகக் கருத்துகள் பேசுவேன். மாணவர்கள் பேச வேண்டும், எழுத வேண்டும், நடக்க வேண்டும், ஓட வேண்டும் என்பது என் விருப்பம். மாணவர்களுக்குப் படிப்பு மட்டும் போதாது. இன்றைக்கு 9 ஆம் வகுப்பு வரை எல்லோரும் தேர்ச்சி என்கிறார்கள். இது ஆசிரியர்கள், மாணவர்கள் இருவரின் வளர்ச்சிக்கும்  தடை. மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத ஆசிரியர்களின் நிலை மாற வேண்டும். வெறும் சதைப் பிண்டமான, கிளிப்பிள்ளை மாணவர்கள் நமக்குத் தேவையில்லை. இயல்பான, ஆற்றல் கொண்ட தலைமுறையை உருவாக்குவது நம் கடமை.

மனித உறவு முக்கியம்

புத்தகம் வாசிப்பதில் குறைவு ஏற்பட்டாலும், மனிதர்களை வாசிப்பதில் குறைவு இருக்கக் கூடாது என எண்ணுவேன். மாணவர்களுடன் நல்ல உறவு வேண்டும் என்பது என் அபிப்பிராயம். ஆசிரியர்கள் வீட்டு நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் செல்வேன். விழாக்கள் நிறைய ஏற்பாடு செய்வேன். அது உறவுகளை வளர்க்கும் என்பது என் நம்பிக்கை. ஓரியூர் என்ற கிராமத்தில், 1991 இல் நான் முதன்முதலில் வகுப்பு எடுத்த 58 மாணவர்களுடன் இன்றும் நட்பில் இருக்கிறேன். அவர்களுடன் சேர்ந்து என்னாலான சமூக சேவைகளைச் செய்து வருகிறேன். 

பெரியாரின் தாக்கம்

உடல் ஊனமுற்ற ஒரு இளைஞர், சக்கர நாற்காலியில் எங்கள் பள்ளிக்கு வந்தார். ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு முன் அந்த இளைஞரைப் பேசச் சொன்னேன். எங்கள் மாணவர்களுக்கு ஏதாவது ஒரு வழியில் நாங்கள் தைரியத்தைக் கொடுக்க வேண்டும். பள்ளி வளாகத்தில்  குப்பையாகச் சேர்ந்துள்ள தாள்களை (paper), விடுதி மாணவர்கள் மூலம் சேகரிக்கச் சொன்னேன். ஆண்டு இறுதியில் அதை விற்று, சிறப்பான பொங்கல் விழா எடுத்தோம். அதேபோல  சக மாணவனுக்கு உதவவும், அவனை நேசிக்கவும் சுபம் என்றொரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளோம். நல்ல மாணவர்களை உருவாக்குவதே ஆசிரியர் பணி. அந்த வேலையைச் செய்வதோடு, ஆசிரியர்களை முடுக்கிவிடுவதையும் முக்கியக் கடமையாக நினைக்கிறேன். முடிவு செய்துவிட்டால், செய்தே தீருவது என் இயல்பு. இப்போது இல்லாவிட்டால் எப்போது ? என்பது நான் அடிக்கடி கேட்டுக் கொள்ளும் கேள்வி.

ஒட்டு மொத்தத் தமிழரின் ஆளுமையையும் நிமிர்த்தி வைத்த பெரியாரின் தாக்கம், எனக்குள்ளும் இருக்கிறது என்பது, என் செயல்களின்  பின்புலமாக இருக்கலாம். ஆசிரியர்கள், தலைமையாசிரியர் சந்திப்புக்குப் பின்னர் மாணவர்களைச் சந்திக்கிறோம். சமூகமே எந்திரி இதழின் ஆசிரியர் சி.சேதுராஜா, துணையாசிரியர் சு.மணிகண்டன். இவர்கள் 10 ஆம் வகுப்பு மாணவர்கள். பேனா முனை  இதழின் ஆசிரியர் இ.ஆரோக்கிய மார்சலின், துணையாசிரியர் கா.விமல். இவர்கள் 9 ஆம் வகுப்பு மாணவர்கள்.
இவர்கள் என்ன சொல்கிறார்கள்? நாம் வாழ்வதற்கு ஏதாவது பொருள் வேண்டும், நம் பயணம் சமூகம் நோக்கி இருக்க வேண்டும் என எங்கள் ஆசிரியர்கள் கூறுவார்கள். அவர்களின் சுழல் இதழைத்  தொடர்ந்து  வாசித்தோம். பின்னர் நாமே ஏன்  நடத்தக் கூடாது என யோசித்து, இதழைத் தொடங்கி விட்டோம்.

மாதம் 100 புத்தகங்கள் தயார் செய்கிறோம். மாணவர்கள் நாங்களே செலவுகளைப் பகிர்ந்து கொள்கிறோம். ஆசிரியர் குழுவில் 10 பேர் இருக்கிறோம். சக மாணவர்கள், ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் அனைவரின் ஒத்துழைப்பும், பாராட்டும் எங்களை வழி நடத்துகிறது என்கிறார்கள் மாணவர்கள்.

                                                                                                                     - வி.சி.வில்வம்

சிறீரங்கம் யானைப் பாகன் வேலை இழந்த கதை


திருச்சி மாவட்டப் பத்திரிகைகளால், அண்மை நாட்களில் அதிகம் பேசப்பட்டவர்.  இவர் யார் என்று விசாரித்த  போது  யானைப் பாகன் என்றார்கள். நாம் நேரில் சென்று சிவசிறீதரன் அவர்களிடம் பேசினோம்.  பின்புதான் தெரிந்தது, அவர் யானைக்குப் பாகன் மட்டுமல்ல; அந்த யானையின் நண்பர்! ஆண்டாள் என்ற பெயருடைய அந்த யானையுடன் 27 ஆண்டுகள் நண்பராக இருந்துள்ளார். இப்போது என்ன பிரச்சினை என்கிறீர்களா? அது குறித்துதான் பேசப் போகிறோம். 

இதோ அடுத்த பக்கத்தில், அவரை நீங்கள் பார்க்கிறீர்கள். பெரிய தாடியுடன் 56 வயது நிறைந்தவராக, நெற்றி நிறைய விபூதியுடன் காட்சி தருகிறார். அவர் ஓர் ஆன்மீகவாதி என்று நமக்குத் தெரிகிறது. இருக்கட்டும்! உங்களுக்கும், எங்களுக்கும் தெரிந்தால் போதுமா? அய்யங்கார் அண்ணன்களுக்குத் தெரிய வேண்டாமா? அவர்கள் இவரை ஆன்மீகவாதியாக ஏற்கவில்லை.காரணம் என்ன? அவர் திருநீறு பட்டைப் போட்டதை நாங்கள் ஏற்கமாட்டோம், நாமம் போட வேண்டும். அதுவும் தென்கலை நாமம் போட வேண்டும், அப்போதுதான் அவரை ஏற்போம் என அய்யங்கார் அண்ணன்கள் மனு மேல் மனுவை 26 ஆண்டுகளாக, கோயில் நிர்வாகிகளுக்கு அனுப்பியுள்ளனர். இது ஒரு பிரச்சினையா? நீங்களோ தமிழர்! நீங்கள் எப்படி இருந்தால் அவர்களுக்கென்ன? என நாம் சிவசிறீதரனிடம் கேட்டோம். என்ன அப்படிக் கேட்கிறீர்கள்? தினமும் காலை 6 மணிக்கு யானையுடன் கோயிலுக்குச் செல்வேன். கருவறை முன்பு நான், யானை, நிறைய அய்யங்கார்கள் நிற்போம். யானை உட்பட எல்லோருமே நாமம் போட்டிருப்பார்கள். நான் மட்டும் பட்டைப் போட்டிருப்பேன்.

அதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் வேலைக்குச் சேர்ந்த நாள் முதல், இதை ஒரு பிரச்சினையாகப் பேசி வந்தார்கள். எனினும் அதுகுறித்து நான் கவலைப்படவில்லை. என் அப்பா சிவராமன் சிறீரங்கம் மற்றும் திருவானைக்காவலில் யானைப் பாகனாக இருந்தவர். மாதம் 6 ரூபாய் சம்பளத்தில் சேர்ந்தவர், 35 ஆண்டுகள் பணி புரிந்தார்.  நான் பிறந்தது திருவானைக்காவல் யானைக் கொட்டகையில். அதனால் யானைகள் குறித்து நான் நன்கு அறிவேன். அதுமட்டுமின்றி யானையும், நானும் எப்போதும் சுத்தமாக இருப்போம்.  நேர்மையாய் இருப்பதிலும், நேர விசயத்திலும் நான் கவனமாய் இருப்பேன். எனினும் அய்யங்கார்களுக்கு இதுவெல்லாம் பெரிய விசயமல்ல. ஒழுக்கம் கெட்ட செயல்கள் எவ்வளவும் செய்யுங்கள், போதையில் தள்ளாடுங்கள், மாமிசத்தைத் தோளில் தூக்கி வாருங்கள், அவர்களுக்குக் கவலையில்லை. நாமம் இருக்கிறதா? அதுபோதும். ஆத்தில் நாராயண அய்யராக இருப்பவர், ஆலயத்தில் நாராயண அய்யங்காராக இருக்க வேண்டும். அதுதான் அவர்களின் கொள்கை, என்கிறார் சிவசிறீதரன். நாமம் போடும் விசயத்தில் எவ்வளவு கவனமாக இருந்துள்ளார்கள் பார்த்தீர்களா? இப்படித்தான் இவர்களுக்குள் பிரச்சினை தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கோயில் அறங்காவலர் குழுத் தலைவராக டி.வி.எஸ். நிறுவனத் தலைவர் வேணுசீனிவாசன் நியமிக்கப்படுகிறார். அவர் சிறீரங்கம் அரங்கநாதருக்கு வழங்கப்படும் மரியாதையைவிட,  தனக்கு அதிகம் வேண்டும் என எதிர்பார்க்கிறார். இச்சூழலில் யானைப் பாகன் குனிவதில்லை, பணிவதில்லை என்பது அறங்காவலரின் குற்றச்சாட்டு. இதுவாவது பரவாயில்லை, யானை என்னை மதிக்கவில்லை, ஆசீர்வதிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டும் வேறு. வேணு சீனிவாசன், திருநெல்வேலியில் உள்ள கோயில்களுக்கு நான்கு யானைகள் சொந்தமாக வாங்கிக் கொடுத்துள்ளார். அந்த யானைகளும், யானைப் பாகன்களும் நிறைய மரியாதையுடன் இருப்பார்களாம்.

அப்படியிருக்கும் போது இப்படியிருந்தால் வேணு சீனிவாசன் எப்படி ஏற்பார்?  சிறீரங்கம் கோயிலுக்கென்று சில சம்பிரதாயங்கள் (?) உண்டாம். அந்தச் சம்பிரதாயங்களை வேணு சீனிவாசன் தம் வசதிக்கு ஏற்ப மாற்ற முயற்சித்துள்ளார். அதன் உச்சமாக கடவுள் வீதி உலா (வாக்கிங்) போகும் போது, யானை முன்னால் செல்லுமாம். அந்த யானையின் மீதேறி அமர்ந்து செல்ல அறங்காவலர் ஆசைப்பட்டுள்ளார். இதை அய்யங்கார்களும், யானைப் பாகனும்  ஏற்கவில்லை. உடனே வெளியிலிருந்து யானையை வாடகைக்குப் பிடித்து, அதில் ஏற முயற்சித்துள்ளார். அதை அவ்வூரின் மக்கள் ஏற்கவில்லையாம். இதனால் சீனிவாசனின் சினம் மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஓர் உதவி யானைப் பாகன் தேவை என்கிற விளம்பரம் 2012இல் நிருவாகத்தால் கொடுக்கப்படுகிறது. என்னால் நன்றாகப் பராமரிக்கும் போது, ஏன் உதவிப் பாகன் என சிவசிறீதரன் கேட்டுள்ளார்.


கோயில்களுக்குத் தேவைப்பட்டால், உதவிப் பாகனை நியமித்துக் கொள்ளலாம் என்கிற அரசாங்க அறிவிப்பை நிருவாகம் காட்டுகிறது. தேவைப்பட்டால்தானே? இங்கு, இப்போது தேவையில்லையே என்பது இவரின் பதில். மேலும் தமிழ்நாட்டில் பல கோயில்களில் உதவியாளர்கள் இல்லை. அருகிலுள்ள திருவானைக்காவலில்கூட இல்லை என விளக்கம் அளித்துள்ளார். இவரின் விளக்கம் அவர்களுக்குக் கோபத்தை அதிகரித்துள்ளது. ஒன்று, பணிந்து குனிந்து செல்ல வேண்டும். இல்லையேல் விலகியிருக்க வேண்டும். அந்த அடிப்படையில் வேலையிலிருந்து தாம் விலகுவதாக அறிவிப்புச் செய்துள்ளார். அதற்கு அங்கிருந்து எந்தப் பதிலும் இல்லை. நான் 27 ஆண்டுகளாக யானையுடன் வசித்து வருகிறேன். திருமணம் செய்து கொள்ளவில்லை. சிறந்த யானைப் பாகன் என்று பெயர் பெற்றவன். யானையை என் பிள்ளைப் போல பாவித்தேன். யானைக்கு உடல் நலம் இல்லாமல் இருக்கிறது.  அந்தப் பெண் யானை, 3,500 கிலோ எடை இருக்க வேண்டும். ஆனால் 4,855 கிலோ இருக்கிறது.

அதனால் மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் யானைக்கு உணவுக் கட்டுப்பாடு உள்ளது. அகத்திக் கீரை, ஆப்பிள், வாழைப்பழம், இனிப்புகள் அறவே கொடுக்கக் கூடாது. தினமும் ஒரு கிலோ கொள்ளு கொடுத்து, நடைப்பயிற்சி அழைத்துச் செல்வதுண்டு. ஆனால், வேணு சீனிவாசன் யானையின் உடல்நிலை அறிந்தும், ஒருமுறை அகத்திக் கீரையை அள்ளி வந்து கொடுத்தார். நான் மறுத்துவிட்டேன். நான் என் வேலையில் சரியாக இருக்க  நினைப்பேன். மூன்று வேளை உணவு சாப்பிடுவேன். இடையில் பிரசாதம் கொடுத்தால்கூட சாப்பிட மாட்டேன். சமஸ்கிருதம் கொஞ்சம் தெரியும். யானையைப் பயன்படுத்தி அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் பொருள்(!) அறிவேன். நான் நாமம் போடவில்லை என்பது மட்டும்தான் அய்யங்கார்களின் குற்றச்சாட்டு. என் வேலையை அவர்கள் குற்றம் சொன்னதில்லை. ஆனால் நாமம் போடாவிட்டாலும் பரவாயில்லை; எனக்கு அதீத மதிப்புத் தர வேண்டும் என்பது வேணு சீனிவாசனின் எதிர்பார்ப்பு என்கிறார் சிவசிறீதரன்.

வேணு சீனிவாசனுக்கு நாமம் குறித்து ஏன் கவலையில்லை என விசாரித்த போது, அவர் வடகலையாம். சிறீரங்க ஆசாமிகளோ தென்கலை. இவர்கள் தங்களுக்குள் கலைகள் பிரித்து, கொலைகள் செய்ததுதான் அதிகம் என வரலாறு சொல்கிறது. ஆக அய்யங்கார்களுக்கு நாமம் போட வேண்டும், அறங்காவலருக்குக் காவடி தூக்க வேண்டும் என்ற நிலையில் யானைப் பாகன் இருந்துள்ளார். நான் யானைப் பாகனாய் சரியாய்த்தானே இருக்கிறேன், அது போதாதா? என்பது சிவசிறீதரனின் அடிப்படைக் கேள்வி. அதெல்லாம் எங்களுக்குப் போதாது. நாங்கெல்லாம் அப்பவே அப்பிடி என்பது இவாள்களின் முழக்கம். ஆகப் பிரச்சினை முற்றவும், 2013 டிசம்பரில் உதவிப் பாகனை வேலைக்கு அமர்த்திவிட்டார்கள்.

அந்த நேரம் யானைக்கு மறுமலர்ச்சி (?) கொடுக்க, இந்த ஆண்டாள் யானையை, பாகன் முதுமலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, உங்களை வேலையிலிருந்து நீக்கிவிட்டோம். உடனே சிறீரங்கம் வரவும் என ஒரு கடிதம் போகிறது. யானைகள் முகாம் முடிந்ததும் வருகிறேன் என இவர் பதில் சொல்கிறார். எதுவும் பேச வேண்டாம், உடனே வரவும் என்பது வேணு சீனிவாசனின் உத்தரவு. வந்ததும் வேலை போனது.

யானையைப் பிரிந்த துக்கத்தில் இப்போது சிவசிறீதரன். எல்லோரும் அவர் வீட்டிற்கு வந்து போகிறார்கள். விசாரிப்புகள் நடந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக பத்திரிகை நண்பர்கள் போகிறார்கள். ஆனால் அவர் சொன்னதை இவர்கள் எழுதவில்லை. அய்யங்கார்களுக்கும், அறங்காவலருக்கும் பாதிப்பு வராமல் எழுதி முடித்தார்கள். குறைந்தபட்சம் சிவசிறீதரன் சொல்வதை அப்படியே பதிய வேண்டும் அல்லவா? அதனால்தான்  நாம் பதிவு செய்திருக்கிறோம்.
- வி.சி.வில்வம்