Thursday, May 16, 2013

இராஜபாளையம் மாநாடும், வித்தியாசமான சில கோணங்களும் !

                                                                                                                                                 
திராவிடர் கழக இளைஞரணி மாநாடு 2002 நடைபெற்று மிகப் பெரும் சாதனை படைத்திருந்தது. இடையில்  கொஞ்சம் தூரம் ஏற்பட்டாலும், அந்தத் தூரத்தின் பாரத்தை 2013 ஆம் ஆண்டின் இராஜபாளையம் மாநாடு புரட்டிப் போட்டுவிட்டது. இன்னும் சொன்னால் நம் தோழர்களை உலுக்கியும், பொது மக்களைக் குலுக்கியும் போட்டது.
நூற்றுக்குப் பத்துப் பேர் இருப்பீர்களா ? எனப் பெரியார் தோழர்களைச் சிலர் கேட்பதுண்டு. அப்படிக் கேட்பதில் அவர்களுக்கு ஓர் மகிழ்ச்சி. அந்தப் பத்துப் பெரும் இல்லாவிட்டால் தம் வீழ்ச்சி எத்தகையது என்பதை அறியாதவர்கள். இதில் அறியாதவர்கள் உண்டு, புரியாதவர்கள் உண்டு, அறிந்தே ஏற்க மறுப்பவர்களும் உண்டு. இவர்களில் எவர் எப்படி இருந்தாலும், அவர்களுக்கும்  பெரியார் கொள்கை நன்மை மட்டுமே செய்யும்.
சமூகம் எந்த நிலையில் இருந்தாலும் பெரியார் கருத்துகளும், அதன் தோழர்களும் நிமிர்ந்தே காணப்படுவார்கள். நன்றாகப் பயின்ற மாணவர்  தேர்வுக்குத்  தயங்கமாட்டார். அதைப்போல சமூகத்தின் நிலையறிந்து, அதற்கான தீர்வுகளையும்  வைத்திருக்கும் ஒரு பெரியார் தோழர் எதற்கு அஞ்சப் போகிறார்?
எப்பேற்பட்ட மனிதருக்கும், அறிஞருக்கும் பதில் சொல்லும் சமூகப் புத்தகம் பெரியாருடையது. அதையறிந்து வைத்திருக்கும் பெரியார் தோழர்கள் 100 க்கு 10 அல்ல, 5 அல்ல, ஒருவர் இருந்தாலும் அவரை ஒன்றும் செய்துவிட முடியாது. பெரியாரின் தொடக்கக் காலங்களில் "ஊருக்கு ஒருவர் இருப்பீர்கள்" எனக் கிண்டலாகச் சொல்வதுண்டு. அதை நாம் மறுக்கப் போவதில்லை. காரணம் அதில் உண்மை இருந்தது. அதேநேரம் அந்த ஒவ்வொருவரும்தான் தமிழ் கூறும் நல்லுலகையே மாற்றிப் போட்டார்கள்.
நாம் ஒரு கேள்விக்  கேட்கிறோம். நூற்றுக்கு ஒருவர் என்றாலும், அந்த ஒருவரின் கேள்விக்குத் தொண்ணூற்றி ஒன்பது பேராகிய உங்களால் பதில் சொல்ல முடிந்ததா? பதில் சொல்ல வகையற்று, எண்ணிக்கைக் கணக்குப் போடுவது தானே உங்கள் வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. "நீங்கள் என்னதான் பகுத்தறிவுப் பேசுங்கள், பழனிக் கூட்டமும், அய்யப்பன் கூட்டமும் குறைந்ததா எனக் கேட்கிறார்கள். நாளுக்கு நாள் ஆன்மிகம் பெருகி வருகிறதே  தவிர, அருகி வரவில்லை என எதுகை மோனைப் பேசுகிறார்கள். ஜாதி, மதங்கள் சௌக்கியமாய் இருப்பதாய்  சான்றிதழும் கொடுக்கிறார்கள்.
இப்படி பேசுகிறவர்களிடம் முதலும், கடைசியுமாய் ஒரே கேள்விதான் கேட்கிறோம். ஆன்மிகம் பெருகி, ஜாதி, மதம் வளர்ச்சி அடைந்தால் யாருக்கு என்ன பயன் ? நாங்கள் ஒழிக்க விரும்புவதும், நீங்கள் வளர்க்க விரும்புவதுமாக இங்கே நீயா ? நானா? போட்டி நடைபெறவில்லை. முன்பே சொன்னதுபோல, சமூகம் எப்படி இருந்தாலும் அதில் பகுத்தறிவாளன் பாதிக்க மாட்டான். எங்களுக்கான வழிமுறைகள், வாய்ப்புகள், தற்காப்புகள் நேர்த்தியாகக்
வகுக்கப்பட்டுள்ளன.
இடஒதுக்கீடு போன்ற சில விசயங்களில் மட்டுமே எங்களுக்கும் சேர்த்து, உங்களுக்காகப்  போராடுகிறோம். மற்றபடி ஜாதி, மதம், மூடநம்பிக்கைகள், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் போன்ற  எண்ணற்ற விசயங்களில் உங்களுக்காக மட்டும்  பாடுபடுவதே நீங்கள் சொல்கிற அந்த "ஒற்றை" ஆட்களின் வேலை.

எங்களோடு நீங்கள் அறிவுப் போராட்டம் நடத்தத் தேவையில்லை. எங்களோடு, எங்களுக்குப் பிடிக்கவே பிடிக்காத "கௌரவம்" என்கிற எண்ணத்தைப் பொருத்திப் பார்க்க வேண்டாம். "நாங்கள் எல்லோரும் சாமி கும்பிட, நீங்கள்  மட்டும் என்ன கடவுள் இல்லை என்பது ? உங்களுக்கு மட்டும் என்ன தனி அறிவா? என்கிற அந்த அறிவுப் போராட்டமும், நாங்கள் மிக, மிகப் பெரும்பான்மையாக இருக்கிறோம், நீங்கள் வெகு சிலர் இருந்து கொண்டு என்ன கொள்கை பேசுவது என்கிற அந்தக்  கௌரவச் சிந்தனையும் எல்லா மட்டத்திலும், எல்லா காலத்திலும் இருந்தே வந்திருக்கிறது.
அதன் தொடர்ச்சியாகத்தான் "ஊருக்குப் பத்து பேர்" என்கிற கிண்டல். உங்கள் கணக்குப்படியே  ஊருக்குப் பத்து பேர் என்றாலும் தமிழகம் முழுக்க எவ்வளவு என்று பெருக்கிக் கொள்ளுங்கள்.  அந்தக் கணக்கையும் மிஞ்சித்தான் இராஜபாளையம் மிதந்தது. மாநாட்டு நிகழ்ச்சிகளை விடுதலை மூலம் விரிவாக அறிந்திருப்பீர்கள். இங்கே நிகழ்ச்சியின் தொகுப்புகளின்றி, அதன் பின்னனிகளைப் பதிவு செய்ய விரும்புகிறோம்.
ஏனெனில் எங்களின் ஒவ்வொரு தோழர்களுக்கும் ஒரு வரலாறு உண்டு. அவ்வகையில் பல்லாயிரக்கணக்கான வரலாறுகளைக் கொண்ட மொத்தக் குவியல்கள் தான் இயக்க வரலாறு. அப்படியிருக்க அது எத்தகைய வலிமைப் படைத்தது என்பதையும் நாமறிய வேண்டும்.
அய்யாயிரம் ஆண்டு பார்ப்பனக் கோட்டையை இடித்துத் தள்ளி, அய்ம்பது ஆண்டுகளில் எழுப்பப்பட்ட பகுத்தறிவுக் கோட்டை தமிழ்நாட்டில் உள்ளது. வீதிக்கோர் ஜாதி மாநாடு போட்டு, தெருச் சண்டைகளை வளர்த்து விடலாம் என்று எண்ணிவிடாதீர்கள். ஏதோ ! கல்லெறிந்தும், மண்ணெறிந்தும் முயற்சித்தால், சிதைந்து போவது உங்கள் சேட்டை தானே தவிர, பகுத்தறிவுக் கோட்டை அல்ல.
ஜாதி மாநாடுகளில் ஜாதிக் கூட்டத்தையும், மத மாநாடுகளில் மதக் கூட்டத்தையும், கோவில்களில் ஆன்மீகக் கூட்டத்தையும் கண்டு மலைத்துப் போயுள்ளீர்கள். அதை மனதில் வைத்தே  சீண்டிப் பார்க்கிறீர்கள். ஒரு உண்மையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எண்ணிக்கை வேண்டுமானால் அதிகமாகத் தெரியலாம். ஆனால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மனதிலும் பகுத்தறிவு உணர்ச்சி இருக்கிறது. ஏதோ ஒரு வகையில் பெரியார் இருக்கிறார். ஒரு மனிதரிடத்தில் 10 விழுக்காடு ஜாதி உணர்ச்சியும், 20 விழுக்காடு ஆன்மீக உணர்ச்சியும், 20 விழுக்காடு மூடநம்பிக்கை உணர்ச்சியும் இருக்கிறது. மீதத்தில் சமூக உணர்ச்சியும், பகுத்தறிவு உணர்ச்சியும், நியாயத் தன்மையும் பரந்தே பிரிந்து கிடக்கிறது. இவ்வுணர்ச்சிகளை அதிகப்படுத்தும் வேலையைத்தான் திராவிடர் கழகம் செய்து வருகிறது. அதன் விளைவு தான் இராஜபாளையம் மாநாடுகள் !
ஒரு மனிதரின் அறிவை தீ வைத்துக் கொளுத்தி விட முடியுமா? முடியாது. பெரியார் கொள்கைகள் என்பது அறிவு. அதை ஒருபோதும் ஒன்று செய்துவிட முடியாது. முழுவதுமாக ஏற்காமல் பலர் இருக்கலாம்; ஆனால் எதிர்க்கக் கூடாது என்பதில் தெளிவாய் இருக்கிறார்கள்.
தென் மாவட்டங்கள் ஜாதி வெறிப் பிடித்தவை என்கிறார்கள். ஒரே ஒரு தீக்குச்சியில் நெருப்பு எரிந்தால், ஊரே பற்றி எரிவதாய் பிரளயம் செய்வார்கள்.
பரபரப்புக் கொடுப்பதில் யார் வல்லவர் என்பதில் எப்போதுமே நம் ஊடகங்களுக்குள் ஒரு போட்டி இருக்கும்.  இரண்டு பக்கமும் 10 பேர் சேர்ந்து அடித்துக் கொ(ல்)ள்வார்கள். அது மிகப் பெரிய ஜாதிக் கலவரம் என்று பெரியளவில் கொண்டு போய் சேர்த்துவிடுவார்கள். அது ஜாதிக் கலவரம் தான் என்பதில் நமக்கும் அய்யமில்லை. அதேநேரம் அது முழுக்க முழுக்க ஜாதிக்கான காரணங்கள் மட்டுமின்றி பல்வேறு அரசியல் சூழ்ச்சிகளும் அடங்கியுள்ளன.
இப்படி பத்து பேர் அடித்துக் கொள்கிற ஒரு ஊரில், அந்த மக்களும் ஜாதி உணர்ச்சிகளோடு இருப்பதில்லை. தன மகனை ஜாதிக் கலவரத்திற்குப் போய் வா என எந்தப் பெற்றோரும் வாழ்த்தி அனுப்புவதில்லை.  மக்களிடம் நாம் இந்த ஜாதி என்கிற எண்ணம் தவிர, வேறெந்த உணர்ச்சிகளும் இருப்பதில்லை. பிள்ளைகளின்  திருமணத்தின் போது, ஜாதியில் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதுவும் ஜாதியைக் காப்பாற்றும் எண்ணத்தில் அல்ல. புதுமையைச் செய்வதில் தயக்கமும், சமூகத்தாரின் கேள்விக்கு அஞ்சியும் மட்டுமே.
இப்படியான நிலையில் தென் மாவட்டத்தின் இராஜபாளையத்தை உலகிற்கு எப்படி அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்கள் ? ஜாதி வெறி பிடித்த ஊர், இந்து மதத்தில் தீவிரம் கொண்டவர்கள், ஆன்மீக உணர்ச்சியில் திளைத்தவர்கள், அப்படிப்பட்டவர்கள், இப்படிப்பட்டவர்கள் என்றெல்லாம் சொல்லி வைத்துள்ளார்கள். மேற்கூறியவற்றில் "வெறி" பிடித்தவர்கள் இருக்கலாம். எத்தனை பேர் ? மொத்தத்தில் நூறு பேர் இருக்கலாம். வேண்டுமானால் அய்ம்பது சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த நூற்றி அய்ம்பது பேர்தான் இராஜபாளையமா?
ஆக ஜாதி, மதத்தைப் பிழைப்பாகக் கருதி சில பேர் இருந்தால் அந்த மாவட்டமே அப்படி என்று ஏற்றுக் கொள்ள முடியுமா? அந்த மாவட்டமே அப்படித்தான் என்பது பார்ப்பன விசத்திற்கு "பவர்" கூட்டு வேலை. இப்படி எல்லா மாவட்டத்தையும் சேர்த்து, தமிழ்நாடே அப்படித்தான் எனச் சொல்ல முயற்சிக்கிறார்கள். இந்துவுக்கே இந்தியா என்பது போன்ற விசமப் பிரச்சாரம் இது.
இவர்கள் சொல்லும் இராஜபாளையத்தில் தான் மேற் சொன்ன மாநாடு நடந்தது. என்ன நடந்தது, எப்படி நடந்தது, என்பதை அறிந்து அம்மாவட்டமே வியப்பில் ஆழ்ந்தது! நேர்மை இருந்தால் பார்ப்பனப் பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதியிருக்க வேண்டியதுதானே ? உண்மையின் உரைக்கல் என்கிறார்கள், தமிழர்களின் நாடித் துடிப்பு என்கிறார்கள். ஒரு மனிதன் வன்முறையில் இதயம் பிளந்தும், நாடித் துடித்தும் செத்தால் பரபரப்புக் கூட்டும் நீ, சமூகத்திற்கு வாழ்வளிக்கும் செய்திகளை மறைப்பது ஏன்?
மாநாட்டுக்கு அனுமதிக் கேட்டுக் காவல் நிலையம் செல்கிறார்கள் தோழர்கள். செய்தியறிந்து காவல் துறையினர் மகிழ்ந்து போனார்களே ! ஊர் முழுக்க, முழுக்கப் பரவிக் கிடந்த விளம்பரங்களைக் கண்டு வியந்து போனார்களே, மாவட்ட மக்கள் ! தொழிலதிபர்கள் நிறைந்த ஊர் இராஜபாளையம். அந்தத் தொழிலதிபர்கள் வாரி, வாரிக் கொடுத்தார்களே மாநாட்டிற்கு. என்ன பொருள் அதற்கு ? பணம் கொடுக்காமல் போனால் படை எடுத்து நிற்கப் போகிறோமா அல்லது நம்மால் பதவி சுகம் உண்டா அல்லது தொழிற்சாலைகளுக்கு நம்மால் நன்மைதான் ஏதும் உண்டா? " தாங்கள் எந்த உணர்ச்சியில் இருந்தாலும் சமூகம் பாதுகாப்பாய் இருக்க வேண்டும். அதற்குப் பெரியார் கொள்கைத் தேவை" என்கிற எண்ணம் தானே காரணம்.
அதேபோல இராஜபாளையம் கடைத் தெருக்களில் நம் தோழர்கள் கருஞ்சட்டையுடன் சென்ற போது, நன்கொடைகளை அள்ளிக் கொடுத்து, பல்லாயிரக் கணக்கில் பணம் பெருகிடச் செய்தார்களே, அதற்கு என்ன பொருள் ? பணம் கொடுக்காவிட்டால் சோடா பாட்டில் எடுப்பார்கள் என்ற பயமா ? கல்லெறிவார்கள் என்ற எண்ணமா ? எதுவுமில்லையே ! நாம் யாரையும் அடிக்க மாட்டோம் என்பதும், அகிம்சாவாதிகளை விட நாம் கோழைகள் என்பதும் அவர்கள் அறியாததா?   அதேநேரம் மனிதர்களை வாழ வைப்பதில், அந்தக் கொள்கைகளில் யாருக்கும் சளைத்திராத வீரர்கள் என்பதையும் அவர்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள்.
மாநாட்டில் பேரணி நடத்தினோம். ஆயிரக்கணக்கில் தோழர்கள் வந்தார்கள். ஊர்வலத்தின் குறுக்கே கார் வந்தது, ஆட்டோ வந்தது, இருசக்கர வாகனம் வந்தது, மிதிவண்டி வந்தது, மனிதர்கள் வந்தார்கள். எங்களைக் குறித்தும் அவர்களுக்குத் தெரியும், அவர்கள் குறித்தும் நாங்கள் அறிவோம். காரணம் நாங்கள் தமிழர்கள் ! தமிழ்நாட்டின் பகுத்தறிவு உணர்ச்சி பெற்ற தமிழர்கள் !!
அவர்களுக்காகத்தான் நாங்கள் பேரணி நடத்துகிறோம். இதை அவர்களும் அறிவார்கள். வெளிப்படையாக சிலர் இதைச் சொல்வதில்லை. ஆனால் கண்டிப்பாக யாரும் மறுக்க மாட்டார்கள். வெளிப்படையாக அவர்கள் சொல்ல நினைக்கும் போது, அவர்களும் பேரணியில் இருப்பார்கள். இதுதான் இயக்க வரலாறு !
பேரணி நடைபெற்ற இருபுறமும் நூற்றுக்கணக்கில் வீடுகள் இருந்தன. இயல்பாய் இருந்தார்கள், பார்த்து இரசித்தார்கள், தோழர்களுக்குத் தண்ணீர் கொடுத்தார்கள். பறை முழங்கியதை, அரிவாள் மீது ஏறியதை, நாக்கில் சூடம் ஏற்றியதை, அலகுக் குத்தி வந்ததை, கார் இழுத்ததை, காவடி தூக்கியதை கண்டெல்லாம் யாரும் பார்த்து ஓடவில்லை. மனம் பனு புண்பட்டதாய் கதறவும் இல்லை.
ஆக ஜாதி, மதம், கடவுள் உணர்ச்சிகளில் மக்கள் ஊறிப் போகவில்லை, ஆறிப் போயிருக்கிறார்கள்! ஆறிப் போன சூழலை ஆற்றுப் படுத்தும் வேலையைத்தான் திராவிடர் கழகம் செய்கிறது. தொடர்ந்து செய்யும் ! 


வி.சி.வில்வம்

No comments:

Post a Comment