Tuesday, February 12, 2013

தொடர்வண்டி பயணம் செய்வோரின் அன்பான கவனத்திற்கு!

 


எனக்கு அண்மைக்காலமாக அய்ந்து, ஆறு முறைக்கு மேல் இந்த அனுபவம் ஏற்பட்டுவிட்டது.திருச்சியிலிருந்து காலை 06.30 மணிக்குப் பல்லவன் இரயில் சென்னைக்குப் புறப்பட்டுச் செல்லும்.நான் அந்த நேரங்களில் உறவினர்கள்,நண்பர்களை வழி அனுப்பச் செல்வேன். ஏறத்தாழ 0.45 நிமிடங்கள் முன்னரே வண்டி நடைமேடைக்கு வந்துவிடும். எனினும் கடைசி நொடியில் சிலர் "பறந்து" வருவார்கள். சிலருடன் குழந்தைகளும், சிறுவர்களும் வருவார்கள். வாய்ப்பைப் பொறுத்து, அவர்கள் வண்டியில் ஏறுவார்கள் அல்லது  நடைமேடையிலே நிற்க வேண்டிவரும். இதுபோன்ற நேரங்களில் எப்போதோ நான் படித்த அந்தப் பொன்மொழி நினைவுக்கு வரும், "ஓடுவதில் பயனில்லை; நேரத்தில் புறப்படுங்கள் !

இது ஒருபுறம் இருக்க, இன்னொன்றை முக்கியமாய் சொல்ல வேண்டும். இவர்கள் எப்படி என்றால் நேரத்திற்கு வந்து விடுவார்கள், ஆனாலும் இரயிலை விட்டுவிட்டு நடைமேடையில் நிற்பார்கள். இது எப்படி என்றால்... நான் பார்த்த நிகழ்வை அப்படியே பதிகிறேன். கணவன் - மனைவி இருவரும் சென்னைக்குப் பயணப்படுகிறார்கள். இரயில் புறப்பட 10 நிமிடம் இருக்கும் போது, அந்தக் கணவர் தண்ணீர் பிடிப்பதற்காக இறங்குகிறார். குடிநீர்க் குழாய், அவர் இருக்கும் பெட்டியில் இருந்து சற்றுத் தள்ளி இருக்கிறது. எனினும் அவர் சென்று தண்ணீர் பிடித்து திரும்பும் வேளையில் இரயில் புறப்பட்டது. அவரின் மனைவி இரயில் வாசல்படியில் நின்று கதறுகிறார். கணவரோ தன்னுடைய பெட்டியை நோக்கி வேகமாக ஓடி வருகிறார். இறுதியில்
அவரால் வண்டியில் ஏறமுடியவில்லை. மனைவி மட்டும் பயணம் செய்ய, இவரோ பரிதாபமாய் நின்று கொண்டிருந்தார்.

இந்த இடத்தில் தான் நாம் சொல்ல வேண்டியிருக்கிறது. தொடர்வண்டி என்ற பெயர் எதற்கு ? தொடர்ந்த வண்டி, நீளமான வண்டி என்று பொருள். ஆக நடைமேடையில் நீங்கள் எந்த இடத்தில் நின்றாலும், உங்கள் அருகில் இருக்கும் பெட்டியிலேயே நீங்கள் ஏறிவிடலாம். அங்கிருந்து கடைசிவரை நீங்கள் நடந்தே போகலாம். இது ஒரு எளிய நடைமுறை. எனினும் இதுகுறித்து தெரியாத காரணத்தால் தண்ணீர் பிடிக்கவும், உணவு வாங்கவும், புத்தகம் வாங்கவும் சென்றவர்கள், கடைசி வரை இரயிலில் ஏற முடியாத நிலையைப் பலமுறை பார்க்க நேரிடுகிறது. திட்டமிட்டுப் பயணம் செய்ய நினைத்து, இதுபோன்ற நிலையால் ஏற்படுகின்ற வழியை, மனஉளைச்சலை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. அதற்குத் தீர்வாக நேரத்திற்கு வருவதும், கடைசி நேரங்களில் தொடர்வண்டியில் இருந்து இறங்குவதைத் தவிர்த்தும், ஒருவேளை இறங்கினால், அருகில் உள்ள பெட்டியில் ஏறிக் கொள்வதையும் நடைமுறையாகக் கொள்வோம்.

அப்போதுதான் இரயில் நிலையங்களில் கடைசியாகச் சொல்வார்களே, "உங்கள் பயணம் இனிதாகட்டும்" என்ற வாசகத்தை நம்மால் ரசிக்க முடியும்.


                                                                                                                                                                                                                                                                              வி.சி.வில்வம்

                                                                                          

No comments:

Post a Comment