Sunday, February 3, 2013

பெல் தமிழ்ப் பயிற்று மொழி பள்ளி

தாய்மொழியின் சிறப்பை வலியுறுத்தும் எண்ணற்ற  அமைப்புகள் இங்கு உள்ளன. தாய்மொழிக் கல்வியால் சிந்தனை வளரும்; சிந்தனை அறிவைப் பெருக்கும்; அறிவு ஆற்றலைக் கொடுக்கும்; ஆற்றல்
தன்னம்பிக்கையை வளர்க்கும் எனப் பேச்சுகளாகவும், கட்டுரைகளாகவும் குவிந்து கிடக்கின்றன. இவையெல்லாம் எங்கே தெரியுமா? மொழியின் பெயரிலேயே நாட்டை வைத்திருக்கும் நம் "தமிழ்"நாட்டில்தான்!
மொழிக்காகப்  பெரும் கிளர்ச்சிகளையும், கணிசமான தமிழர்களையும்
கொடுத்த நாடு இந்த நாடு. இத்தமிழ்நாட்டில்தான் தாய்மொழிக் கல்விப்
பெரும் சீரழிவில் இருக்கிறது. 

இந்தியாவின் எல்லா மாநில மக்களும் தத்தம் மொழிக்கு  முதல் மரியாதையும், பிற மொழிகளுக்கு இரண்டாம் இடமும்  வழங்குகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் ஆங்கிலத்திற்கு முதல் மரியாதையும், இந்திக்கு  இரண்டாம் மரியாதையும், பிற பிற வெளிநாட்டு மொழிகளுக்கு மூன்றாம் மரியாதையும் வழங்குகிறார்கள். தாய்மொழித் தமிழுக்கு இறுதி மரியாதை  கூட தருவதில்லை. ஒரு குழந்தைத்  தமிழ் வழியில் பயில்கிறது என்றால் ஒன்று, அக்குழந்தை  இனவுணர்வாளர் குடும்பத்திலிருந்து வந்திருக்க வேண்டும் அல்லது தொழிலாளர் குடும்பத்திலிருந்து வந்திருக்க வேண்டும். பொருளியல் நலிவடைந்த ஒரு தொழிலாளர் தங்கள் குடும்பக் கவுரவம் (?) பாதிக்கக் கூடாது என எண்ணினால் அங்கும் ஆங்கில வழிதான்.  

ஏனெனில் மொழி என்பது இங்கு கவுரமாகவும், அறிவாகவும் பார்க்கப்படுகிறது. தமிழ் மொழியால் கவுரவம் போய்விடுகிறது, ஆங்கில வழியால்  அறிவு வந்துவிடுகிறது. அவ்வளவுதான் ! இந்த வினோதமான பிழை  எண்ணம் அனைத்துத் தமிழர் நெஞ்சங்களிலும் புற்றுநோயாகச்  சிவந்துக்  கிடக்கிறது.

சில உணர்வாளர்கள் கூட, நல்ல பள்ளிகள் இல்லையே எனக்  கவலைப்படுவதாய்க்... கவலைப்பட்டு, ஆங்கில வழிக்கு உரம் சேர்க்கின்றனர். இது என்ன அறம் எனத் தெரியவில்லை. தமிழர்கள் பல்வேறுபட்ட அமைப்புகளில் இருக்கிறார்கள், இருக்கட்டும் ! ஆனால் தான் பின்பற்றும்  கொள்கைகளைத்  தவறாது பின்பற்ற  வேண்டும். அப்போதுதான் அக்கொள்கைக்கு மதிப்பும் ஏற்படும், கூடவே சமூக அங்கீகாரமும் கிடைக்கும். நாம் பின்பற்றாமல் நம்முடைய  வெறும் பேச்சும், வெறும் பிரச்சாரமும் எந்தப் பலனையும் கொடுக்காது. மாறாக செயல், செயல், செயல் ஒன்றுதான் இங்கு சிறப்பு. இப்படியான "செயல்படும்" ஒரு சமூகத்தைக் கட்டி அமைக்க நல்ல அரசியல் அமைப்பும் நம்மிடம் இல்லை. 

ஆனாலும், "தாய்மொழியில்  பயின்று நான் ஒரு விஞ்ஞானியாக இருக்கிறேன். தாய்மொழியில் படித்தால்தான் அறிவும், சிந்தனையும் உயரும்", என மயில்சாமி அண்ணாதுரை மேடை தோறும் முழங்குகிறார். அதேபோல 8 மொழிகள் பேசும், பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னால் துணைவேந்தர் மு.பொன்ன வைக்கோ, "எத்தனை மொழிகள் தெரிந்தென்ன? அத்தனைக்கும் அறிவைத் தந்தது தாய்மொழிதான்" என அற்புதமாய் ஒலிக்கிறார்.

இப்படியான சூழலில் தாய்மொழிக் கல்வியைச் சிறப்பாகவும், இன்னபிற
உயர்தர (!) பள்ளிகளுக்கு இணையாகவும் செயல்படும் ஓர் பள்ளியையும் இங்கே நாம் நெஞ்சில் பதிய வேண்டியிருக்கிறது.
திருச்சிராப்பாளி மாவட்டம், திருவெறும்பூர்  கைலாசபுரம் (BHEL) வளாகத்தில் "பெல் தமிழ்ப் பயிற்று மொழி"  நடுநிலைப்பள்ளி உள்ளது. 1964 - இல் தொடங்கப் பெற்று, 48 ஆண்டுகள் ஆனது. தொடக்கத்தில் 32 மாணவர்களும், இரு ஆசிரியர்களும் இருந்துள்ளனர். இன்று சற்றொப்ப 800 மாணவர்களும் , 28 ஆசிரியர்களும் நிரம்பி இருக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டின்  பெரும்பாலான பள்ளிகளில் இது தலைகீழாக இருப்பதை நாம் உணர முடியும். அதாவது தொடக்கத்தில் 800 மாணவர்களுடன்  28 ஆசிரியர்களும்,  இப்போது  32 மாணவர்களுடன்,  2 ஆசிரியர்களுமே இருப்பர். ஆனால் அப்படி இல்லாமல் இப்பள்ளி, சாமான்ய வீட்டுக் குழந்தைகளைச் சாதிக்க வைத்தும், கல்வியின் தரத்தை மேம்படுத்தியும், பிற பள்ளிகளுடன் ஆக்கபூர்வமாகப்  போட்டியிட்டும் அசராமல் தடம் பதித்து வருகிறது.

இந்த ஊரின் அனைத்துப் பள்ளிகளுக்கும் இடையேயும் நிகழும், அனைத்துப் போட்டிகளிலும் இப்பள்ளி மாணவர்கள் பங்கு பெறுவர்; பரிசுகளை அள்ளி வருவர்!  பரிசுகளே கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, களத்திற்கு சென்று வா என மாணவர்களை அனுப்பிவிடுகின்றனர்.

ஒரு கல்லூரிக்கு நிகரான சாரண சாரணீய இயக்கம் நடத்துவதும், ஆண்டுதோறும் மாணவர் தலைவர், உபதலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதும், தினமும் ஒரு திருக்குறள் கூறி மாணவர்களின் வாழ்க்கையை ஒழுங்குப்படுத்துவதும், பொதுச் செய்திகளை வாசித்து மாணவர்களைச்  சமூகப்படுத்துவதும், சட்ட வாக்கியங்களை எடுத்துக் கூறி விழிப்புணர்வூட்டுவதும் எனப்  பல்வேறு சிறப்பம்சங்கள் இங்கு தொடர்கின்றன.அதுமட்டுமின்றி, தினமும் ஒரு ஆங்கில வரிகளைக் கற்றுத் தருவதும், விளையாட்டு  விழா, ஆண்டு விழா, குழந்தைகள் தின விழா என ஒன்று விடாமல் நேர்த்தியாக நடத்தி, குழந்தைகளை உற்சாகப்படவும் வைக்கிறார்கள்.

நாம் மேலே எழுதிய ஆங்கில மோகம், கவுரவம் எல்லாவற்றையும் உதறித்தள்ளி, இப்பள்ளியைப்  பெற்றோர்கள் தேர்வு செய்கிறார்கள் என்பதே இப்பள்ளிக்கான உயர்தரச் சான்றாக உள்ளது.  இப்பள்ளியின் பெருமைகளுக்கு "பெல் நிறுவனம்"முக்கியக்  காரணமாக அமைந்து வருகிறது. இதேபோன்ற நிலையைத்  தமிழ்நாடு முழுக்க இயங்கி வரும் பள்ளிகளும் பெற வேண்டும். இது மொழி உணர்வாளர்களின் தனிப்பட்ட கவலை அல்ல.  நல்ல சமூகத்தை, ஆற்றல் நிறைந்த மாணவர்களை  உருவாக்க  வேண்டும் என நினைக்கிற ஒவ்வொருவரின் கவலையும் ஆகும்! 



வி.சி.வில்வம்

  
                                                                                                   

No comments:

Post a Comment